பீகார் சட்டமன்றத்தில் 234 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து, பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
பெரும்பான்மைக்கு 122 தொகுதிகள் தேவை என்ற நிலையில், மொத்தமுள்ள 243 தொகுதிகளில், தே.ஜ., கூட்டணி, 202ல் அபார வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ., 89; ஐக்கிய ஜனதா தளம் 85 தொகுதிகளை கைப்பற்றி உள்ளன. 143 தொகுதிகளில் போட்டியிட்ட ராஷ்ட்ரீய ஜனதா தளம், 25; 61ல் களமிறங்கிய காங்., 6 தொகுதிகளையும் வென்றுள்ளன. மூன்றில் ஒரு பங்கு தொகுதிகளை இந்த கூட்டணி கைப்பற்றவில்லை. இதனால் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காது. கடந்த, 2020 சட்டசபை தேர்தலில், 75 தொகுதிகளை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவான ராஷ்ட்ரீய ஜனதா தளம், இந்த தேர்தலில் அவற்றில் பாதியை கூட வெல்லவில்லை.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “நல்ல நிர்வாகம், வளர்ச்சி, பொது நலன், சமூக நீதி ஆகியவற்றுக்கான வெற்றி கிடைத்துள்ளது. முன் எப்போதும் இல்லாத வகையில், 2025 தேர்தலில் என்.டி.ஏ.வுக்கு வெற்றியை கொடுத்துள்ள பிகார் மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த மகத்தான பொது மக்கள் தீர்ப்பு, பீகார் மக்களுக்கு சேவை செய்யவும், புதிய உறுதியுடன் பணியாற்றவும் எங்களுக்கு வாய்ப்பு அளிக்கிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநிலத்தின் அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்துள்ளது. எங்கள் சாதனைப் பதிவுகளையும், மாநிலத்தை புதிய உயரத்திற்குக் கொண்டு செல்வதற்கான எங்கள் தொலைநோக்குப் பார்வையையும் கண்ட பிறகு, மக்கள் எங்களுக்கு மிகப்பெரிய பெரும்பான்மையை வழங்கியுள்ளனர்.
ஆட்சி அமைக்க தேவையான 122 தொகுதிகளுக்கு மேலாக மொத்தம் 204 தொகுதிகளில் என்.டி.ஏ. கூட்டணி முன்னிலையில் இருந்து வருகிறது. இதன் மூலம், பிகாரில் மீண்டும் என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, “ஓய்வின்றி உழைத்த என்.டி.ஏ. தொண்டர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த மகத்தான வெற்றிக்காக முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் எங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்களான சிராக் பாஸ்வான், ஜிதன் ராம் மஞ்சி மற்றும் உபேந்திர குஷ்வாஹா ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓய்வின்றி உழைத்த என்.டி.ஏ. தொண்டர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் தான் மக்களிடத்தில் சென்று வளர்ச்சி பற்றி எடுத்து கூறியும், எதிர்க்கட்சிகளாக பரப்பப்பட்ட பொய்களுக்கு உடனடியாக பதில் கொடுத்தனர்.
வரும் காலங்களில், பீகாரின் வளர்ச்சியை நோக்கி நாங்கள் தீவிரமாகச் செயல்படுவோம், இங்குள்ள உள்கட்டமைப்புக்கும் மாநிலத்தின் கலாச்சாரத்திற்கும் ஒரு புதிய அடையாளத்தைக் கொடுப்போம். இங்குள்ள இளைஞர் சக்தியும், மகளிர் சக்தியும் வளமான வாழ்க்கைக்கு ஏராளமான வாய்ப்புகளைப் பெறுவதை உறுதி செய்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.

