புதுச்சேரி மாநிலத்தில் அரசு துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு வாரத்தில்
வெள்ளிக்கிழமைகளில் இரண்டு மணி நேரம் வேலை சலுகை வழங்கப்படும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் முதல்வர் ரங்கசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை சார்பில் இரண்டு ஆண்டுகளில் வெறிநாய் கடியால்
ஏற்படும் ரேபிஸ் நோயை முடிவுக்கு கொண்டு வர மாநில செயல் திட்டத்தை
செயல்படுத்த இரண்டு நாட்கள் நடைபெறும் பயிலரங்கை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தொடக்கி வைத்தார். முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் தேனீ ஜெயக்குமார் மற்றும் சுகாதாரத்துறை, கால்நடைத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்
மற்றும் முதல்வர் ரங்கசாமி ஆகியோர், புதுச்சேரி அரசு அலுவலகங்களில் பணிபுரியும்
பெண்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்கள் வழக்கமான வெள்ளிக்கிழமைப் பூஜைகள் மேற்கொள்வதற்கு ஏதுவாக ஒரு மாதத்தில் மூன்று வெள்ளிக்கிழமைகள் மட்டும் காலை 8. 45 முதல் காலை 10. 45 வரை 2 மணி நேரம் சிறப்பு அனுமதி அளிக்கப்படும் என்றும் இதற்கான பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறையின் கோப்புக்கு அனுமதி அளித்துள்ளாதாக தெரிவித்தனர்.
மேலும் சிறப்பு அனுமதி மாதத்தில் மூன்று வெள்ளிக்கிழமைகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் இதனால் அரசு பணிகள் பாதிக்கப்படக்கூடாது. பெண்கள் மட்டுமே பணிபுரியும் இடங்களில் சுழற்சி முறையில் அனுமதி வழங்கலாம்.
மருத்துவமனைகள், காவல் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் போன்ற நேரடி பொதுமக்கள் சேவை/அத்தியாவசியப் பணிகளில் உள்ள பெண்களுக்கு இந்த சிறப்பு அனுமதி பொருந்தாது என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
