மணிப்பூரில் சமீபத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள், உயிர் இழப்புகள் மற்றும் பொது அமைதிக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பான முக்கிய வழக்குகளை விசாரிக்க தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) பொறுப்பேற்றுள்ளது. இந்த சம்பவங்களுக்கு தொடர்பான உத்தியை உள்துறை அமைச்சகம் நவம்பர் 16-ஆம் தேதி வெளியிட்டது, இதற்குப் பிறகு இவ்வழக்குகள் மணிப்பூர் காவல்துறையிலிருந்து என்ஐஏ-க்கு மாற்றப்பட்டுள்ளன. சமீபத்தில் மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் முகாமில் தங்கி இருந்த மைதேயி சமூகத்தைச் சேர்ந்த ஆறு பேர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர், இதில் குகி சமூகத்தைச் சேர்ந்த ஆயுதக் குழுவினர் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கொலைகள் மற்றும் வன்முறையைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தும். மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வரும் மத்திய உள்துறை அமைச்சகம், சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அனைத்து பாதுகாப்புப் படையினருக்கும் அறிவுறுத்தியுள்ளது. வன்முறை மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகளில் ஈடுபட முயற்சிக்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என உள்துறை அமைச்சகம் வலியுறுத்துகிறது. இதற்கிடையில், மணிப்பூரில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட, வதந்திகளை நம்பாமல், பாதுகாப்புப் படையினருடன் ஒத்துழைக்கவும், அமைதியைப் பேணவும் பொதுமக்களை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்துவதற்காக 2,000 மத்திய ஆயுதக் காவல் படையினர் (CAPF) அனுப்பப்பட்டுள்ளனர். தேவையெனில், மேலும் படைகளை அனுப்புவதற்கான முடிவை உள்துறை அமைச்சகம் எடுத்துள்ளது. மணிப்பூரின் பாதுகாப்பு நிலை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக, மணிப்பூர் அரசியல் நிலவரம் குறித்து இன்று அவர் மேலும் ஆலோசனை நடத்துவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மணிப்பூரில் பாஜக கூட்டணி அரசில் இருந்து தேசிய மக்கள் கட்சி (என்பிபி) நேற்று விலகியது. மணிப்பூர் சட்டப்பேரவையில் மொத்தம் 60 எம்எல்ஏக்கள் உள்ளனர். அந்த மாநிலத்தில் முதல்வர் பிரேன் சிங் தலைமையில் பாஜக கூட்டணி அரசு ஆட்சி நடத்தி வருகிறது. இதில் தேசிய மக்கள் கட்சியும் (என்பிபி) இடம் பெற்றிருந்தது. மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த பாஜக தவறிவிட்டதாக குற்றம் சாட்டி என்பிபி கட்சி பாஜக கூட்டணி அரசில் இருந்து விலகியது

