மே 3ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முறைகேடு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. ராஜஸ்தானில் தேர்வுக்கு முன்பே வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், நீட் தேர்வில் பெரிய அளவில் முறைகேடு நடந்ததாக நாடு முழுவதும் கண்டனங்கள் அதிகரித்தன. இதையடுத்து முதற்கட்ட விசாரணையில் தேர்வை செல்லுபடியாக ஏற்க முடியாது என முடிவு செய்யப்பட்டதால், மே 3ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுதேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும், மாணவர்கள் மீண்டும் கட்டணம் செலுத்த தேவையில்லை என்றும், ஏற்கனவே பயன்படுத்திய பதிவெண் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் நாடு முழுவதும் சுமார் 23 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த காலங்களில் பல முறை வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தாலும், முதல்முறையாக நீட் தேர்வே ரத்து செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மருத்துவ மாணவர் சேர்க்கை பணிகளும் திட்டமிட்டபடி தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

