பெங்களூரு குண்டு வெடிப்பு சம்மந்தமாக தகவல் சொன்னால் ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என என்ஐஏ தெரிவித்துள்ளது.
கர்நாடக தலைநகர் பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே குந்தலஹள்ளி பகுதியில் ராமேஸ்வரம் கபே உணவகம் அமைந்து உள்ளது. பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ள இந்த உணவகம் எப்போதும் பரபரப்புடன் காணப்படும். வழக்கம்போல் மார்ச் 1 ஆம் தேதி மதியம் சுமார் 1 மணியளவில் அங்கு ஏராளமானோர் அங்கு அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர்.
அப்போது, அதி பயங்கர சத்தத்துடன் 2 முறை வெடிகுண்டுகள் வெடித்து சிதறின. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பெண், உணவக ஊழியர்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் உணவகத்தின் கை கழுவும் பகுதியில் குண்டுகள் வெடித்து சிதறியது தெரியவந்தது. மேலும் அங்கிருந்த ஒரு பையில் ஒரு அடையாள அட்டை, பேட்டரி, இரும்பு போல்டு ஆகியன இருந்தன. அவற்றை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கை என்ஐஏ விசாரணைக்கு எடுத்துள்ளது. அந்தவகையில் பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ள தேசிய புலனாய்வு முகமை, அவர் பயன்படுத்திய தொப்பி மூலம் அவரது அடையாளத்தை கண்டுபிடித்தது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பில் தொடர்புடைய மேலும் 2 பேரின் புகைப்படங்களை என்ஐஏ வெளியிட்டுள்ளது. அதன்படி முஸாவீர் உசேன் ஷாஸீப், அப்துல் மதீன் அகமது தாஹா பற்றி தகவல் சொன்னால் தலா ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் எனவும் என்ஐஏ அறிவித்துள்ளது.

