இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல்; இந்திய பிரதமர் மோடி அதிர்ச்சியடைந்தாக அறிக்கை, இஸ்ரேலுடன் துணை நிற்பதாக ட்வீட்

அரசியல் அரபு நாடுகள் இந்தியா உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

இஸ்ரேலில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்த கடினமான நேரத்தில் இஸ்ரேலிய மக்களுடன் இந்தியா துணை நிற்கிறது என பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனதிற்கு இடையே காசா பகுதி தொடர்பான பிரச்சனை பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. காசா பகுதி தங்களுடையது எனக் கூறி இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே அடிக்கடி போர் ஏற்பட்டுவிடுகிறது.
அதே போல தற்போதும் இரு நாடுகள் இடையே போர் மூண்டுள்ளது. போர் மூண்டுள்ளதால் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க அந்நாட்டு அரசு அறிவுறுத்தி உள்ளது. ஹமாஸ் படையினர் தொடர்ச்சியாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ‘Operation Iron Sword’ எனும் பெயரில் இஸ்ரேல் ராணுவத்தினர் ஹமாஸ் படையினர் பதுங்கி இருக்கும் இடங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இருநாடுகளுக்கு இடையே போர் மூண்டியுள்ளதால், இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
தனியாக இருப்பதை தவிர்த்து பாதுகாப்பு முகாம்களில் தங்க வேண்டும் என்றும், உள்ளூர் நிர்வாகம் வெளியிடும் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுமாறும், அவசர தேவைக்கு இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அதில், இஸ்ரேலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும், பாதிக்கப்பட்ட மக்களின் குடும்பத்திற்காக பிரார்த்திக்கிறோம் என்றும், இந்த கடினமான நேரத்தில் இஸ்ரேலுடன் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம் என்றும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *