வடமேற்கு நைஜீரியாவின் சோகோடோ மாநிலத்தில் அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 குழந்தைகள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.வியாழக்கிழமை காலை, ஆற்றின் கரையோர வயல்வெளிகளில் நெல் நடவு பணிக்காக 70-க்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் குழந்தைகள் ஒரே படகில் பயணம் செய்துள்ளனர். ஆற்றின் நடுப்பகுதிக்குச் சென்றபோது, அதிகப்படியான சுமை காரணமாக படகு திடீரென கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், உள்ளூர் நீச்சல் வீரர்கள் மற்றும் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதுவரை 40 குழந்தைகள் உட்பட 50 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்டவர்களில் 46 பேரின் உடல்கள் சம்பவ இடத்திலேயே அடக்கம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாதது மற்றும் பழமையான படகில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்றது ஆகியவை விபத்துக்கான முக்கிய காரணங்களாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், காணாமல் போனவர்களைத் தேடும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

