மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள 2024ம் ஆண்டுக்கான தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பின் பட்டியலில், இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள கல்வி நிறுவனங்களை ஊக்கப்படுத்துவதற்காகவும் அவற்றின் தரத்தை மேம்படுத்தவும் ஒன்றிய கல்வி அமைச்சகம் கடந்த 2016ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் தரவரிசைப் பட்டியல் தயாரித்து வெளியிட்டு வருகிறது. இதற்காக என்.ஐ.ஆர்.எஃப். என்ற தேசிய தரவரிசை மதிப்பீடு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு நாடு முழுவதிலும் உள்ள கல்வி நிறுவனங்களை பல்கலைக்கழகங்கள், மருத்துவம், பொறியியல், சட்டம், ஆராய்ச்சி நிறுவனங்கள் என பல்வேறு பிரிவுகளாக தரவரிசைப்படுத்தி அறிவித்து வருகிறது.

