தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
அரசு கருவூலம் மூலம் ஓய்வூதியம் பெறும் 100 வயதை கடந்த ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய வாழ்நாள் சான்று வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ்நாட்டில் 100 வயதை கடந்த 50 ஓய்வூதியர்களில் முக்கியமானவர் 1916 ஆம் ஆண்டு பிறந்த நாகை மாவட்டம் நாகூரைச் சேர்ந்த 107 வயதான கு.கோபாலகிருஷ்ணன். ஓய்வுபெற்ற ராணுவ வீரரான அவரை நேரில் சந்தித்து நலம் விசாரிப்பதற்காக, அமைச்சா் தங்கம் தென்னரசு நேற்று அவரது வீட்டிற்கு சென்றார்.
அங்கு அவருக்கு ஓய்வூதிய வாழ்நாள் சான்றை வழங்கிய அமைச்சர் சிறிது நேரம் முதியவரிடம் உரையாடி, முதியவரின் உடல் நலனுக்காக நவீன வசதியுடன் கூடிய படுக்கை வாங்குவதற்கு ரூ.50 ஆயிரம் நிதி உதவியை வழங்கினார்.
தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அமலுக்கு வரும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
