விஜயகாந்த் அற்புதமானவர் என புகழ்ந்து, அவருடன் நீண்டகால நெருக்கம் மற்றும் சமூக நன்மைக்காக இணைந்து பணியாற்றியதைக் குறிப்பிட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
பிரதமர் நரேந்திர மோடி அரசியலைத் தாண்டி தனக்கு சகோதரர் போன்றவர் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு காணொளியை பகிர்ந்துள்ள பிரேமலதா விஜயகாந்த், அந்தக் காணொளியில், விஜயகாந்தின் உடல்நலம் குறித்து பிரதமர் கேட்டறிந்ததாகவும், பிரதமர் மோடி சிறந்த தலைவராக விளங்குவதாகவும் பிரேமலதா விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடிக்கும் அவருக்கும் இடையில் இருந்த உறவு, அரசியலைத் தாண்டிய ஒன்று. ‘தமிழகத்தின் சிங்கம்’ என்று அன்பாக அழைப்பதோடு, அவரது உடல்நலக் குறைபாடுகள் போது ஒரு சகோதரரைப் போல கவலைப்பட்டு, அடிக்கடி தொடர்புகொள்வார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்தக் காணொளிக்கு பதில் அளித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, தனது எக்ஸ் பக்கத்தில், “எனது இனிய நண்பர் கேப்டன் விஜயகாந்த் அற்புதமானவர். நானும், அவரும் பல ஆண்டுகளாக நெருக்கமாக கலந்துரையாடியதுடன், இணைந்து பணியாற்றியும் இருக்கிறோம். சமூக நன்மைக்காக அவர் செய்த பணிகளுக்காக பல தலைமுறைகளைச் சேர்ந்த மக்கள் அவரை நினைவு கூர்கிறார்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.
