பாஜக சார்பில் சேலம் கெஜல்நாயக்கன்பட்டியில் இன்று நடந்த பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதற்காக கேரளாவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கெஜல் நாயக்கன்பட்டி பொதுக்கூட்ட மைதானத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்தார். இதில், அண்ணாமலை, எல்.முருகன், வானதி சீனிவாசன் ஆகிய பா.ஜ.க தலைவர்களும், ராமதாஸ், அன்புமணி, பாரிவேந்தர், ஜான் பாண்டியன், ஓ.பி.எஸ், டி.டி.வி என கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர். அப்போது கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாசை பிரதமர் நரேந்திர மோடி கட்டி அணைத்து வரவேற்றார். பொதுக்கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், நாட்டின் நலன் கருதி, தமிழ்நாட்டின் நலன் கருதி பாஜக-வோடு கூட்டணியில் இணைந்திருக்கிறோம். தமிழ்நாட்டில் 57 ஆண்டுகளாக இரு கட்சிகள் ஆட்சி செய்து வருகின்றன. தமிழக மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். மக்களின் அந்த ஏக்கத்தை தணிக்கத்தான் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக இணைந்திருக்கிறது. எனது தந்தை மருத்துவர் ராமதாஸும் ஏழை விவசாயின் மகன். சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர். தனது தந்தையும் பல்வேறு சமூக புரட்சிகளை மேற்கொண்டுள்ளார். இந்த இரண்டு தலைவர்களும் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இரு பெரும் தலைவர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர். சாதாரண குடும்படுத்தில் பிறந்த மோடி நம் நாட்டை ஆண்டுக் கொண்டிருக்கிறார். 3-வது முறையாக இந்தியாவின் பிரதமராக மோடி வரவேண்டும் என்பது பா.ம.க.வின் விருப்பம், நிச்சயமாக அவர் 3வது முறையாக பிரதமராக வருவது உறுதி, என்றார்.

