பாம்பன் புதிய ரயில் பாலத்தின் திறப்பு விழாவிற்காக பிரதமர் மோடி நாளை ராமேஸ்வரம், மண்டபம் வருகிறார். இதற்கான ஏற்பாடுகளாக ராமேசுவரத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் செய்யப்பட்டுள்ளன.பழைய ரயில் பாலம் சேதமடைந்ததன் காரணமாக, புதிய ரயில் தூக்குப் பாலம் கட்டப்பட்டுள்ளது. தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் பிரதமர் மோடி, நாளை (ஏப்ரல் 6) காலை 10.40 மணிக்கு இலங்கை அனுராதபுரத்திலிருந்து இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டரில் புறப்பட்டு, மதியம் 12 மணிக்கு பாம்பன் புதிய ரயில் தூக்குப் பாலத்தை திறந்து, புதிய ‘பாம்பன் எக்ஸ்பிரஸ்’ ரயில் சேவையை தொடங்கவுள்ளார். பிற்பகல் 12.30 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு, பிரதமர் ராமேசுவரம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பிறகு, ரயில்வே சார்பில் நடைபெறும் பாம்பன் புதிய ரயில் பாலத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். அந்த நிகழ்வில், வாலாஜாபேட்டை-ராணிப்பேட்டை, விழுப்புரம்-புதுச்சேரி, பூண்டியன்குப்பம்-சட்டநாதபுரம், சோழபுரம்-தஞ்சாவூர் ஆகிய பகுதிகளுக்கான நான்கு வழிச் சாலை திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மத்திய இணையமைச்சர் முருகன், மாநில அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், எம்.பி.க்கள் நவாஸ்கனி, தர்மர் மற்றும் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

