‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக புதுப்பிக்கப்பட்ட 103 ரயில்வே நிலையங்களை, பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்ஸ் மூலம், வரும் 22ம் தேதி திறந்து வைக்க உள்ளார். ரயில்வேயில், ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ், 508 ரயில் நிலையங்களை, 24,470 கோடி ரூபாயில் மேம்படுத்தும் பணிகள் கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்று வருகின்றன. தெற்கு ரயில்வேயில், 40க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன. நாடு முழுவதும், பணிகள் நிறைவடைந்த நிலையில் 103 ரயில் நிலையங்களை, பிரதமர் மோடி டெல்லியில் இருந்து, ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம், வரும் 22ம் தேதி திறந்து வைக்க உள்ளார். தெற்கு ரயில்வேயின் கீழ், சென்னை பரங்கி மலை, சிதம்பரம், மன்னார்குடி, ஸ்ரீரங்கம், விருத்தாசலம், திருவண்ணாமலை, போளூர், கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி மற்றும் ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டை உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன. பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ள இந்த ரயில் நிலையங்களில், லிப்ட், நடை மேம்பாலம், கூடுதல் நடைமேடை, பயணிகள் காத்திருப்பு அறைகள், நுழைவாயில்கள் சீரமைப்பு, எஸ்கலேட்டர்கள், மல்டி லெவல் பார்க்கிங் மற்றும் ‘சிசிடிவி’ கேமரா போன்ற பல வசதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
	

 
						 
						