பிரதமர் நரேந்திர மோடி, கானா, ட்ரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். மேலும், பிரேசிலில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டிலும் பங்கேற்கவுள்ளார்.பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த பத்தாண்டு ஆட்சிகாலத்தில் மிகக் குறுகிய நாள்களில், அதிக நாடுகளுக்கு அவர் மேற்கொள்வுள்ள சுற்றுப்பயணமாக இந்தப் பயணம் பார்க்கப்படுகிறது.8 நாள்கள் கொண்ட இந்தச் சுற்றுப்பயணம் ஆப்பிரிக்க நாடான கானாவில் இன்று (ஜூலை 2) தொடங்குகிறது. இங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள்கள் கலந்துகொள்ளவுள்ளார்.பிரதமராகப் பதவியேற்ற பிறகு மோடியின் முதல் கானா பயணம் இதுவாகும். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக எந்த இந்தியப் பிரதமரும் கானாவுக்குச் சென்றதில்லை.கானா தேர்தலில் வெற்றி பெற்று, பதவியேற்ற கானா அதிபர் ஜான் டிராமணி மஹாமாவை மோடி சந்திக்கவுள்ளார். பின்னர் ஜூலை 3 ஆம் தேதி டிரினிடாட் மற்றும் டொபாகோவுக்குச் செல்வார். டிரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசின் பிரதமர் கம்லா பெர்சாத்-பிஸ்ஸேசரின் அழைப்பின் பேரில் அவர் இந்த பயணத்தை மேற்கொள்கிறார். ஜூலை 4 ஆம் தேதி பிரதமர் மோடி ஆர்ஜென்டீனாவுக்குச் செல்கிறார். அதிபர் ஜேவியர் மிலேயின் அழைப்பின் பேரில் மோடி இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார். 1968 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு இந்தியப் பிரதமரின் முதல்பயணம் இதுவாகும்.உணவு, பாதுகாப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம், மருத்துவம், சுரங்கம், பசுமை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய துறைகளில் மோடியும் மிலேயும் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்துவார்கள். ஜூலை 6 ஆம் தேதி பிரேசிலுக்குச் செல்கிறார் பிரதமர் மோடி. ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் மோடி கலந்து கொள்ளவுள்ளார். இது மோடியின் நான்காவது பிரேசில் பயணமாகும்.ஜூலை 9 ஆம் தேதி நமீபியாவுக்கு விமானம் மூலம் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, நமீபிய அதிபர் டாக்டர் நெடும்போ நந்தி-நதைத்வாவைச் சந்திக்கிறார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு இந்தியப் பிரதமர் நமீபியாவுக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும். மேலும், ஒரு இந்தியப் பிரதமர் அந்த நாட்டிற்கு வருகை தருவது 3-வது முறையாகும்.

