தனியார் விண்வெளி ஒப்பந்த நிறுவனங்களுக்கு, ராணுவ கண்காணிப்பு செயற்கைக்கோள்களை உருவாக்கும் பணியை ஒன்றரை ஆண்டுகளுக்குள் நிறைவேற்றுமாறு இஸ்ரோ அறிவுறுத்தியுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ உடன் இணைந்து செயற்கைக்கோள் உருவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் பல தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதில், தெலுங்கானாவின் ஹைதராபாதைச் சேர்ந்த ‘அனந்த் டெக்னாலஜீஸ்’, கர்நாடகாவின் பெங்களூரைச் சேர்ந்த ‘சென்டம் எலக்ட்ரானிக்ஸ்’ மற்றும் ‘ஆல்பா டிசைன் டெக்னாலஜீஸ்’ ஆகிய நிறுவனங்கள் ராணுவ கண்காணிப்பு செயற்கைக்கோள்களை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளன.இந்த திட்டத்தின் கீழ், 52 கண்காணிப்பு செயற்கைக்கோள்கள் உருவாக்கப்பட உள்ளன. இதில், 31 செயற்கோள்களை உருவாக்கும் ஒப்பந்தம் மூன்று தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வழக்கமாக, செயற்கைக்கோள் உருவாக்கும் பணிக்கு நான்கு ஆண்டுகள் வரை கால அவகாசம் வழங்கப்படும். ஆனால், தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றத்தை கருத்தில் கொண்டு, இஸ்ரோ இந்த கால அவகாசத்தை ஒன்று முதல் ஒன்றரை ஆண்டுகள் குறைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கண்காணிப்பு செயற்கைக்கோள் தயாரிப்பு பணிகளை விரைவில் முடிக்கவும் அந்த மூன்று நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

