கடந்த 19 நாட்களுக்கு பிறகு, நேற்றிரவு இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் அமைதியான சூழல் நிலவுவதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, கடந்த 7ம் தேதி இந்திய முப்படைகள் இணைந்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தின. இதற்குப் பிறகு, பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவின் 15க்கும் மேற்பட்ட நகரங்களையும் பொதுமக்களையும் குறிவைத்து டிரோன் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்த முயன்றது. இந்தியாவின் வலுவான வான் பாதுகாப்பு அமைப்புகள், அவற்றை வானிலேயே வழிமறித்து அழித்தன. இரு நாடுகளுக்கு இடையே 4 நாட்களாக மோதல் நடந்த நிலையில், அமெரிக்காவின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து, நேற்று முன்தினம் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் மோதலை நிறுத்திக் கொள்வதாக இந்தியாவும், பாகிஸ்தானும் அறிவித்தன. இதனிடையே நேற்றிரவு ஜம்மு-காஷ்மீர் மற்றும் பிற பகுதிகளில் பெரும்பாலான பகுதிகள் அமைதியாக இருந்தது. கடந்த 19 நாட்களுக்கு பிறகு நேற்றிரவு எல்லையில் ட்ரோன்கள், ஏவுகணைகள் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவம் ஏதும் நிகழவில்லை. அமைதியான சூழல் நிலவியது” என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

