ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘பதான்’ ஹிந்தி திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.780 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் நடித்து கடந்த 25-ம் தேதி வெளியான ஹிந்திப் படம், ‘பதான்’. இப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். ‘பதான்’ 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாருக்கான் நடித்த படம் என்பதால், ரசிகர்கள் தியேட்டரில் குவிந்து வருகின்றனர்.
முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.106 கோடி வசூல் அள்ளிய இந்தப் படம் அடுத்தடுத்த நாட்களிலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. 4 நாட்களில் ரூ.400 கோடிக்கு மேல் வசூல் குவித்திருந்தது. 8 நாட்கள் முடிவில் படம் உலகம் முழுவதும் ரூ.667 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது படம் வெளியாகி 11 நாட்கள் ஆன நிலையில் உலக அளவில் படம் ரூ.780 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ.481 கோடியை வசூலித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.