இலங்கையின் 16வது பிரதமராக ஹரிணி அமரசூரியா நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தல் கடந்த 21ம் தேதி நடந்து முடிந்து அந்நாட்டின் அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக இரண்டாவது விருப்ப வாக்கு எண்ணும் நிலைக்கு சென்று அதில், தேசிய மக்கள் சக்தி கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுரா குமார திசநாயக்க 55% வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார். இதனைத் தொடர்ந்து அவர் கடந்த 23ம் தேதி எளிமையான முறையில் இலங்கையின் அதிபராக பதவி ஏற்றார்.
இவர் அதிபராக பதவி ஏற்றத்தைத் தொடர்ந்து அந்நாட்டின் பிரதமராக இருந்த தினேஷ் குணவர்தனே தனது பதவியை ராஜினாமா செய்தார். தற்போது இலங்கையின் 16வது இடைக்கால பிரதமராக தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஹரிணி அமரசூரியா நியமிக்கப்பட்டுள்ளார். இவரை பிரதமராக நியமித்து அதிபர் அனுரா குமார திசநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம், ஹரிணி அமரசூரியா இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமர் எனும் சிறப்பையும் பெற்றார். இதற்கு முன்னதாக இலங்கையின் முதல் பெண் பிரதமராக ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மற்றும் இரண்டாவது பிரதமராக சந்திரிகா பண்டாரநாயக்க ஆகியோர் பதவிவகித்தனர். இவர்களைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது பெண் பிரதமர் எனும் பெருமையை ஹரிணி அமரசூரியா பெற்றுள்ளார்.
