அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ‘பால்கன் 9’ ராக்கெட், மூலம் ஜூன் 26 தேதி அன்று மதியம் 12.01 மணிக்கு ‘டிராகன்’ விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலத்தில் அமெரிக்கா, இந்தியா, போலந்து மற்றும் ஹங்கேரி நாடுகளைச் சேர்ந்த தலா ஒரு விண்வெளி வீரர் என 4 பேர் பயணம் செய்தனர். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) வீரர் சுபான்ஷு சுக்லா (39) இந்த பயண திட்டம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த நிலையில், ‘பால்கன் 9’ ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட ‘டிராகன்’ விண்கலம் சுமார் 28 மணி நேரத்தில் 418 கி.மீ. பயணித்து சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்துள்ளது. தொடர்ந்து ‘டிராகன்’ விண்கலம் தற்போது விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது. தொடர்ந்து ‘டிராகன்’ விண்கலத்தில் இருந்து சுபான்ஷு சுக்லா மற்றும் குழுவினர் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்குள் வந்தனர். ஏற்கனவே அங்கு இருக்கும் விண்வெளி வீரர்கள் அவர்களுக்கு பானம் கொடுத்து வரவேற்றனர். இந்திய விமானப்படையின் போர் விமானியாக தனது பயணத்தை தொடங்கிய சுபான்ஷு சுக்லா, ராகேஷ் சர்மாவை தொடர்ந்து சுமார் 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்கு சென்ற 2-வது இந்தியர் ஆனார் . சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுபான்ஷு சுக்லா மற்றும் குழுவினர் 14 நாட்கள் தங்கி 60 ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர். புவியீர்ப்பு விசை இல்லாத சூழலில் மனித உடல் தசையில் செயல்பாடு குறித்து சுபான்ஷு சுக்லா ஆய்வு மேற்கொள்ள உள்ளார் என்று கூறப்படுகிறது.

