குடியரசு தலைவர் இன்று உதகை வருவதற்கான முன்னெச்சரிக்கையாக, நேற்று வாகன ஒத்திகை நடைபெற்றது. மேலும், மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க 4 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை சூலூர் விமானப்படை தளத்துக்கு வருவார், அங்கு இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டம் உதகைக்கு செல்லவுள்ளார். உதகையில் உள்ள ராஜ்பவனில் அவர் தங்கவுள்ளார்.நவம்பர் 28-ஆம் தேதி, குடியரசு தலைவர் கார் மூலம் குன்னூர் வெலிங்டனில் அமைந்துள்ள ராணுவப் பயிற்சிக் கல்லூரிக்கு பயணம் செய்கிறார். அங்கு, போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கான நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலியளிக்கிறார். பின்னர், ராணுவப் பயிற்சிக் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அதிகாரிகள் மத்தியில் உரையாற்றுகிறார். நிகழ்ச்சி முடிந்த பிறகு, அவர் மீண்டும் உதகை ராஜ்பவனுக்கு திரும்புகிறார். வரும் 29-ஆம் தேதி ஓய்வெடுக்கும் குடியரசு தலைவர், 30-ஆம் தேதி காலை ஹெலிகாப்டர் மூலம் சூலூர் விமானப்படை தளத்திற்கு வருகிறார். அங்கு இருந்து, திருவாரூர் நோக்கி பயணம் செய்து, மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் கடுமையான போலீசாரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சேலம், ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட போலீசார்களை பாதுகாப்புப் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

