சென்னை மாநகரில் தெரு நாய்கள் மற்றும் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் வழங்குதல், மைக்ரோசிப் பொருத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கு ஒருங்கிணைந்த மேலாண்மை இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி எல்லைக்குள் செல்லப் பிராணிகளை வளர்ப்பதற்கு உரிமம் பெறுவது கட்டாயமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.செல்லப் பிராணிகள் வளர்ப்பை முறைப்படுத்த கடந்த 2023-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் முதல் மாநகராட்சி இணையதளம் வாயிலாக செல்லப்பிராணி உரிமம் பெறுவது நடைமுறையில் உள்ளது. செல்லப் பிராணிகளின் உரிமையாளர் தங்களின் புகைப்படம், முகவரிச் சான்று, செல்லப்பிராணி புகைப்படம் மற்றும் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்ட சான்றிதழ் ஆகியவற்றை பதிவேற்றம் செய்து ரூ.50 உரிமக் கட்டணமாகச் செலுத்தி உரிமம் பெற்று வருகின்றனர். கடந்த 2024-ம் ஆண்டுமுதல் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை 12,393 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நாட்டிலேயே முதன்முறையாக சென்னை மாநகராட்சியில் நாய்களுக்கு மைக்ரோசிப் செலுத்துதல், உரிமம் வழங்குதல் உள்ளிட்ட ஒருங்கிணைந்த மேலாண்மை இணையதள சேவை உருவாக்கப்பட்டு தற்போது தொடங்கியுள்ளது.
