இன்று முதல் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25 விழுக்காடு வரி மற்றும் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக அபராதத் தொகை வசூலிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். உலக நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் மீதும் பரஸ்பர வரி விதித்த டிரம்ப், வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுக்கும் வகையில், இந்த வரி விதிப்புக்கான கெடுவை ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. விவசாயம் மற்றும் பால் பொருட்கள் துறையில் இரு நாடுகளிடையே உடன்பாடு எட்டப்படாமல் இருந்து வந்த நிலையில், வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் 20 முதல் 25 விழுக்காடு வரி விதிக்கப்படும் என இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். அந்த வகையில்,25% இறக்குமதி வரி இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த வரி விதிப்பால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதியாகும் செல்போன்கள், வாகன உதிரி பாகங்கள், ஜவுளி, மருந்துப் பொருட்கள், வைரம் உள்ளிட்டவைகளின் விலை உயர உள்ளது. அதேநேரம், தோல், கிரானைட் ஏற்றுமதி பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

