தென்னாப்பிரிக்கா அருகே பயணம் செய்த சொகுசு சுற்றுலா கப்பலில் மேலும் 4 பேருக்கு ஹான்டா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எலிகளின் சிறுநீர் மற்றும் மலத்தின் மூலம் பரவும் இந்த வைரஸ் காரணமாக ஏற்கனவே 3 பேர் உயிரிழந்துள்ளனர். அர்ஜென்டினாவில் இருந்து அன்டார்டிகா வழியாக கேப் வெர்டே தீவுக்கு சென்ற நெதர்லாந்து நாட்டின் “எம்வி ஹோன்டியஸ்” என்ற சுற்றுலா கப்பலில் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டது.150 பயணிகளுடன் சென்ற இந்த கப்பல் தற்போது கேப் வெர்டே தீவுகளுக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதில் மேலும் 4 பேருக்கு வைரஸ் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கரைக்கு இறங்க கேப் வெர்டே அரசு அனுமதி மறுத்துள்ளது. பயணிகளின் உடல்நிலை குறித்து உலக சுகாதார நிறுவனம் தீவிரமாக கண்காணித்து வருகிறது.

