திருமலை திருப்பதி மலைப்பாதையில் பயணிக்க 15 வயதுக்குள்பட்ட சிறார்களுக்கு அனுமதி இல்லை என தேவஸ்தானம் முடிவு அறிவித்துள்ளது.
பக்தர்கள் சாலை மார்க்கமாகவும், நடைபாதை வழியாக நடந்தே வந்தும் ஏழுமலையானை தரிசனம் செய்கிறார்கள். இதற்கு இரு வழிகள் உள்ளன. ஒன்று அலிபிரி, இன்னொன்று ஸ்ரீவாரிமெட்டு ஆகியவை ஆகும்.
திருப்பதிக்கு வரும் பக்தர்கள் இரு நடைபாதைகள் வழியாக திருமலை வந்து ஏழுமலையானை தரிசனம் செய்கிறார்கள். அந்த வகையில் பெரும்பாலானோர் அலிபிரியை விட ஸ்ரீவாரிமெட்டு பாதையை தேர்வு செய்கிறார்கள். இதன் பயண தூரம் குறைவாகும். அலிபிரி வழியாக திருமலையை அடைய 3,800 படிக்கட்டுகள் நடக்க வேண்டும்.
அப்போதுதான் 7 மலைகளை தாண்டி 9 கி.மீ. தூரம் பயணித்து திருமலையை அடைய முடியும். இதன் பயண நேரம் 4 மணி நேரமாகும். அதே ஸ்ரீவெங்கடாஜலபதியே ஸ்ரீவாரிமெட்டு வழியாக நடந்து திருப்பதி சென்றார் என ஐதீகம் சொல்கிறது. அதில் 2000 படிக்கட்டுகளும் 3 கி.மீ. தூரமும் இருக்கிறது. இந்த நிலையில் இரு மலைபாதைகளிலும் விலங்குகள் நடமாட்டம் இருக்கிறது.
இதனால் இரவு நேரங்களில் இந்த வழியே பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோடை காலங்களில் தண்ணீருக்காகவும் உணவுக்காகவும் காட்டு விலங்குகள் இந்த மலை பாதைக்கு வருவதாக தேவஸ்தானம் எச்சரிக்கை விடுக்கிறது. இந்த நிலையில் திருப்பதி வனப்பகுதியில் சிறுமியின் சடலம் கிடைத்துள்ளது.
திருப்பதி மலைப்பாதையில் பெற்றோர்களுடன் நடந்து சென்ற 6 வயது சிறுமி கரடி தாக்கி இறந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லூரிலிருந்து திருப்பதிக்கு வந்தவர் லட்சிதா. இவர் பெற்றோர்களுடன் இரவு திருப்பதி மலைக்கு அலிபிரி வழியாக பாதயாத்திரையாக வந்து கொண்டிருந்தார்.
அப்போது நடைபாதையில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகே திடீரென சிறுமி காணாமல் போயுள்ளார். அவரை பெற்றோர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து புகாரின் பேரில் வனத்துறையினர் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அலிபரி நடைபாதையில் அடர் வனப்பகுதியில் காயங்களுடன் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது.
உடல் இருந்த இடத்தில் கரடி நடமாட்டம் இருந்ததால் கரடி தாக்கி சிறுமி உயிரிழந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் திருப்பதி நடைபாதையில் 500 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். ஒவ்வொரு 40 அடிக்கும் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தான் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் 15 வயதுக்குள்பட்ட சிறுவர்களை மலைபாதை வழியில் அனுமதிப்பதில்லை என தேவஸ்தானம் முடிவு செய்து அறிவித்துள்ளது. திருப்பதி மலைப்பாதையில் 15 வயதுக்குள்பட்ட சிறார்களுக்கு அனுமதியில்லை. அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு மலை பாதையில் செல்ல சிறுவர்களுக்கு அனுமதி இல்லை. இரு சக்கர வாகனங்களும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதி என தெரிவித்துள்ளது.

