திருப்பதி பிரம்மோற்சவம் கோலாகலம்; 8 நாட்களில் 6 லட்சம் பக்தர்கள் தரிசனம்

ஆன்மீக தளங்கள் ஆன்மீகம் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் கோயில்கள் சுற்றுலா செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

திருப்பதி கோயில் பிரம்மோற்சவம் நடந்த 8 நாட்களில் ஏழுமலையானை 5.47 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். உண்டியலில் ₹24.22 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 18ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்றுடன் நிறைவுபெற்றது. 25ம்தேதி வரை 8 நாட்களில் பிரம்மோற்சவத்தின் போது 5.47 லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். கருட சேவை உற்சவத்தின்போது 72,650 பேர் மூலவரை தரிசனம் செய்தனர். நான்கு மாட வீதியில் கருட வாகன சேவையில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் சுவாமியை வழிபட்டனர். பக்தர்களுக்காக 8 லட்சம் லட்டுகள் இருப்பு வைத்து தொடர்ந்து 30.22 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள், 8 நாட்களில் உண்டியலில் ₹24.22 கோடி காணிக்கையாக செலுத்தினர். குழந்தைகள் காணமல் போவதை தடுக்க 6,000 குழந்தைகளுக்கு பெற்றோரின் விவரங்களுடன் கூடிய டேக் கட்டப்பட்டது. வேண்டுதலன்படி தலைமுடி காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்காக 1,150 சவரத்தொழிலாளர்கள், 11 கல்யாண கட்டா மையத்தின் மூலம் 2.07 லட்சம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். 16.28 லட்சம் பக்தர்களுக்கு உணவு மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. கருட சேவை நாளில் மட்டும் 4.81 லட்சம் பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது. 40 மருத்துவர்கள், 35 துணை மருத்துவர்கள் மற்றும் 13 ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்பட்டு 31 ஆயிரம் பக்தர்களுக்கு மருத்துவ சேவை வழங்கப்பட்டது.
சுவாமி வீதி உலாவின்போது 152 அணிகளைச் சேர்ந்த 3,710 கலைஞர்களுடன் 12 மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. 45 டன் மலர்களுடன் மலர் கண்காட்சி, கோயில், திருமலையில் உள்ள அனைத்து சந்திப்புகள், ஓய்வு இல்லங்கள் மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டது. இதற்காக 3 லட்சம் பூக்கள், 75,000 பருவகால பூக்கள் பயன்படுத்தப்பட்டன. நாடு முழுவதில் இருந்து 3,342 வாரி சேவா தன்னார்வலர்கள் பக்தர்களுக்கு சேவை அளித்தனர் என தேவஸ்தானம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *