ஆசிய விளையாட்டு போட்டியில் 41 ஆண்டுகளுக்கு பிறகு குதிரையேற்றத்தில் தங்கம் பதக்கம் வென்று இந்திய அணி அசத்தியுள்ளது. சீனாவின் ஹாங்சோவ் நகரில் 19 ஆவது ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில், 45 நாடுகளை சேர்ந்த 12 ஆயிரத்து 400 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். திறன்மிக்க வீரர்களுடன் களம் இறங்கியுள்ள இந்திய அணியும், பதக்கங்களை வேட்டையாடி வருகிறது.
ஆசிய விளையாட்டு போட்டியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் EQUESTRIAN எனப்படும் குதிரையேற்ற போட்டி நடைபெற்றது. இதில், இந்திய அணி சார்பில் அனுஷ், விபுல், திவ்யகீர்த்தி உள்ளிட்ட குழு குதிரைகளுடன் களம் இறங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், இந்திய அணி 209.205 புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்தது. இதன் மூலம், இந்திய அணி 41 ஆண்டுகளுக்கு பிறகு குதிரையேற்றத்தில் தங்கம் வென்று அசத்தியுள்ளது.
கடந்த 1982 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் முதன் முறையாக குதிரையேற்றம் அறிமுகம் செய்யப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற அப்போட்டியில், இந்திய அணி குதிரையேற்றத்தில் தங்கம் வென்று சாதனை படைத்தது. அப்போது, குதிரையேற்றத்தில் மட்டும் இந்திய அணி, 3 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என 5 பதக்கங்களை குவித்தது. அதன் பிறகு, தற்போது தான் இந்திய அணி தங்கம் பதக்கத்தை கைப்பற்றியுள்ளது.

