பெர்லின் திரைப்பட விழாவில் நடிகர் அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் திரையிடப்பட உள்ள நிலையில், அல்லு அர்ஜுன் ஜெர்மனி கிளம்பியுள்ளார்.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்த படம் ‘புஷ்பா’. பான் இந்தியா படமாக வெளியான ’புஷ்பா’ திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்தார். ஃபகத் ஃபாசில், சுனில், அனசூயா, தனஞ்செயா என பல்வேறு திரைநட்சத்திரங்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். தேவிஸ்ரீபிரசாத் இசையில் உருவான இப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நடித்த அல்லு அர்ஜூனுக்கு சிறந்த நடிகருக்கான (2021) தேசிய விருதும் அறிவிக்கப்பட்டது.
படத்தின் பாடல்ளும் உலகளவில் புகழ்பெற்றன. புஷ்பா படத்தின் பெரும் வெற்றியையடுத்து, படத்தின் இரண்டாம் பாகமும் தயாராகி வருகிறது. இந்நிலையில், இந்தாண்டிற்கான பெர்லின் திரைப்பட விழாவிற்கு புஷ்பா படம் தேர்வாகியுள்ளது. இன்று முதல் பிப்ரவரி 24 ஆம் தேதி இந்த திரைப்பட விழா நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக அல்லு அர்ஜூன் ஜெர்மனி கிளம்பியுள்ளார்.
வெகுநாட்களாக எந்தவித அப்டேட்டும் இல்லாமல் இருந்த அல்லு அர்ஜூன் ரசிகர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

