அமெரிக்காவில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில், காதில் ரத்தம் சொட்ட சொட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, அந்நாட்டின் பென்சில்வேனியாவில் உள்ள பட்லர் என்ற இடத்தில், குடியரசு கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபருமான டொனால்டு டிரம்ப், பொதுமக்கள் மத்தியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது கூட்டத்தில் இருந்து டிரம்பை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் காதில் காயம் அடைந்த டிரம்ப், உடனடியாக “மைக் STAND” பின்புறம் பாதுகாப்பாக குனிந்தார்.
உடனடியாக, டிரம்ப் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டார். துப்பாக்கிச்சூட்டில் அவரது வலது காதில் காயம் ஏற்பட்ட நிலையில், ரத்தம் முகத்தில் வழிய டிரம்ப் ஆக்ரோஷமாக முழங்கினார்.
இந்நிலையில், கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார். மேலும் துப்பாக்கியால் சுட்டவரையும் அந்நாட்டு காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். காதில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டிரம்ப், தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கும் நிலையில், வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது அந்நாட்டு அரசியலில் பெரும் விவாதப் பொருளாகி உள்ளது.

