தற்போது, பொதுமக்கள் ரயிலில் பயணம் செய்வதற்காக இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐஆர்சிடிசி இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்து டிக்கெட்டுகளை வாங்குகின்றனர். இந்த இணையதளத்தை 85 சதவீதம் பயணிகள் பயன்படுத்துகிறார்கள்.மேலும், சரக்கு ரயில் போக்குவரத்து மற்றும் ரயில்வே சுற்றுலா போன்ற சேவைகள் தனித்தனியாக செயலிகள் மூலம் வழங்கப்படுகின்றன. இதனால், ரயில் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகள் ஒருங்கிணைந்த சேவையைப் பெறுவதில் சிரமம் அனுபவிக்கிறார்கள். இதற்கான தீர்வாக, ரயில்வே அமைச்சகத்தின் அனைத்து சேவைகளையும் ஒரே செயலியில் வழங்கும் சூப்பர் ஆப் என்ற செல்போன் செயலி உருவாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூப்பர் ஆப் மூலம் பயணிகள் விரைவாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம், மேலும் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளையும் எளிதாக பெற முடியும்.பயணிகள் பிஎன்ஆர் எண் மூலம் தங்கள் டிக்கெட்டுகளை உறுதிப்படுத்துவது, ரயில்களின் பயண இடங்களை காண்பது, உணவுகளை ஆர்டர் செய்வது போன்ற பல்வேறு சேவைகளை பெற முடியும். இந்த புதிய செல்போன் செயலி இரண்டு பிரிவுகளை கொண்டிருக்கும்; ஒன்று பயணிகளுக்காகவும், மற்றொன்று சரக்கு வாடிக்கையாளர்களுக்காகவும். இதன் மூலம், சரக்கு அனுப்புதல், தேவையான ஆவணங்களை சமர்ப்பித்தல், கட்டணங்களை செலுத்துதல் போன்ற செயல்பாடுகள் எளிதாக செய்யப்படும்.இந்த ரயில்வே சூப்பர் செயலி, இந்த ஆண்டு இறுதியில் பயன்பாட்டுக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது. செயலி செயல்பாட்டுக்கு வந்தவுடன், ரயில்வே பயணிகள் அனைத்து தேவையான வசதிகளையும் ஒரே செயலியின் மூலம் எளிதாகப் பெற முடியும், .ரயில் பயணிகள் சிரமம் இன்றி டிக்கெட் முன்பதிவு செய்ய வழிவகை ஏற்படுவதால் மக்கள் தங்கள் பயணத்தில் சிரமம் இல்லாமல் இருக்க முடியும் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

