மத்திய அரசு மாநிலங்களுக்கான வரி பகிர்வை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் நடைபெற்ற தமிழக நிதி குழு கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது, முக்கியமான திட்டங்களை உருவாக்கி அவற்றை செயல்படுத்துவது மாநில அரசின் பொறுப்பாகவே உள்ளது. வரி பகிர்வு முறையாக வழங்கப்படாததால், மாநிலங்களுக்கு ஏற்பட்டுள்ள சுமை அதிகரித்துள்ளது. கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில், மாநிலங்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றன. தமிழக அரசு சுகாதாரம், கல்வி, வேளாண்மை போன்ற முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசு போதிய அளவிலான நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இதன் விளைவாக, தமிழகத்தின் நிதி நிலைமை பாதிக்கப்பட்டுள்ளது. வரி பகிர்வு அடிப்படையில் தமிழகத்திற்கு தேவையான நிதி வழங்கப்பட வேண்டும். மத்திய அரசு குறைந்த அளவிலான நிதியை மட்டுமே வழங்குகிறது. 41 சதவீதம் நிதி பகிர்வு வழங்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டிருந்தாலும், 33.16% மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு வழங்கப்படும் வரி பகிர்வு தொடர்ந்து குறைந்து வருகிறது. நிதி குழு கூடுதல் நிதி வழங்க வேண்டும். தற்போதைய வரி பகிர்வு முறை, தமிழகத்தை தண்டிக்கும் விதமாக உள்ளது. மாநிலங்களுக்கான வரி பகிர்வை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என மத்திய அரசு பரிந்துரைக்க வேண்டும். மாநிலங்களுக்கு சமச்சீரான வரி பகிர்வு வழங்கப்பட வேண்டும். வளர்ந்த மாநிலங்களின் வளர்ச்சியை பாதிக்காத வகையில் புதிய அணுகுமுறை தேவைப்படுகிறது. இயற்கை பேரிடர்களால் மாநில கட்டமைப்புகள் பெரிதும் சேதமடைந்துள்ளன. சீரற்ற வரி பகிர்வு மாநில அரசின் செயல்பாட்டில் தடையூட்டுகிறது. கடந்த 45 ஆண்டுகளாக நிலவும் வரி பகிர்வு முறையில் மாநிலங்களுக்கு எந்தவொரு பயனும் கிடைக்கவில்லை. இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும் தமிழகத்திற்கு தேவையான நிதி வழங்கப்படுவதில்லை. இவ்வாறான பேரிடர்களால் ஏற்படும் இழப்புகளை மீட்டெடுக்க தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

