கோவையில் தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற பா.ஜ., தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் உள்ளிட்ட 2,000 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை குண்டுவெடிப்பு முக்கிய குற்றவாளி பாட்ஷா சமீபத்தில் மரணம் அடைந்தார். அவரது இறுதி ஊர்வலத்துக்கு போலீசார் அனுமதி அளித்ததை எதிர்த்து, பா.ஜ. மற்றும் இந்து இயக்கங்கள் சார்பில் நேற்று மாலை கோவை சித்தாபுதூர் வி.கே.கே.மேனன் சாலையில் கண்டன பேரணி நடைபெற்றது, இதில் திரளானோர் பங்கேற்றனர். அவர்கள் காந்திபுரம், கிராஸ்கட் சாலை வழியாக சிவானந்தா காலனி பவர் ஹவுஸ் நோக்கி செல்ல திட்டமிட்டிருந்தனர். வி.கே.கே.மேனன் சாலையிலிருந்து பேரணி ஆரம்பித்து, காந்திபுரம் சிக்னலை கடக்க முயன்ற போது, தடையை மீறியதாக பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையை போலீசார் கைது செய்தனர். இதற்குப் பிறகு, பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், செயலாளர் கிஷோர் குமார் உள்ளிட்ட 2000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

