மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 19 காளைகளைப் பிடித்து முதலிடத்தை வென்ற கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்திக்கு பரிசாக கார் மற்றும் ரூ.3 லட்சம் காசோலை வழங்கப்பட்டது.
பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியை தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று காலை சுமார் 7:00 மணியளவில் கொடியசைத்து போட்டியைத் தொடங்கி வைத்தார்.
மொத்தம் 11 சுற்றுகள் நடைபெற்ற இப்போட்டியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட காளைகளும் 600 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர். இறுதிச்சுற்று முடிவடைந்த நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து போட்டியில் சிறப்பாக செயல்பட்ட மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
அதன் படி கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்தி 19 காளைகளைப் பிடித்து முதலிடம் பிடித்தார். இவருக்கு பரிசாக கார் மற்றும் ரூ.3 லட்சம் காசோலையை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.

