அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமையை எதிர்த்து, திமுக அரசை விமர்சித்து கோவையில் தனது வீட்டு முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று (டிச.27) காலை தன்னைத் தானே சாட்டையால் அடித்து போராட்டம் நடத்தினார். கோவை, காளப்பட்டி சாலையில் அமைந்துள்ள அவரது வீட்டின் முன், இன்று காலை 10 மணியளவில் தொண்டர்கள் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “இன்று நாங்கள் முன்னெடுத்துள்ள இந்தப் போராட்டம் மேலும் தீவிரமடையும். இது தனி நபருக்கு எதிரான போராட்டம் அல்ல. தமிழகத்தில் கல்வித் தரம் குறைந்துள்ளது” எனக் கூறினார். திமுக ஆட்சியிலிருந்து நீக்கப்படும்வரை காலணியை அணிய மாட்டேன். இந்த அரசு தவறான வழியில் செயல்படுகிறது. அறவழியில் போராடுவதற்கும் அனுமதி இல்லை. இதனை எதிர்த்து நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். நாங்கள் தவறுகளை எதிர்த்து அரசியல் செய்கிறோம். அரசியலில் தேர்தல் வெற்றி அல்லது தோல்வி என்பது முக்கியமல்ல. 2026 ஆம் ஆண்டின் தேர்தலில் தோல்வியடைந்தாலும், நான் கவலைப்பட மாட்டேன். முன்னதாக, அண்ணாமலை சாட்டையால் அடிக்கப்படும்போது, பாஜக தொண்டர்கள் வெற்றிவேல், வீரவேல் எனக் கூச்சலிட்டனர், மேலும் “வேண்டாம், வேண்டாம், சாட்டையடி வேண்டாம்” எனவும் கூறினர்.

