சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கான ஒப்புதல் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. 1931ம் ஆண்டுக்குப் பிறகு 2011ம் ஆண்டு நடைபெற்ற சமூக பொருளாதார மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஜாதி தொடர்பான தகவல்களும் சேகரிக்கப்பட்டன. ஆனால், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட ஜாதிவாரி சமூக நிலை குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. 2021ல் நடைபெறவிருந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு, கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. எதிர் கட்சிகள் இதற்கான கோரிக்கைகளை நீண்ட நாட்களாக முன்வைத்துள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையில் இன்று அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது, இதில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, ஜே.பி.நட்டா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் முடிந்த பிறகு, ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், அமைச்சரவையின் கூட்டத்தில் எடுத்த முடிவுகளைப் பற்றி அறிவித்தார். அவர் கூறியதாவது, தேசிய அளவில் சாதி அடிப்படையில் கணக்கெடுப்பு நடைபெறும். எதிர்வரும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன், சாதி விவரங்களும் இணைக்கப்படும் என கூறினார். நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பை நிறைவேற்றுவதற்கு குறைந்தது 2 ஆண்டுகள் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

