பலுசிஸ்தான் இனி பாகிஸ்தானின் ஒரு மாகாணமாக இருக்காது என்றும், அது விடுதலை பெற்றுவிட்டதாகவும் பலூச் தலைவர் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய மாகாணமான பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்க கோரி கிளர்ச்சியாளர்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். சமீபத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் சூழ்நிலையில், பலூச் அமைப்பின் தலைவர் மிர் யார் பலூச் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, ‘1947 ஆகஸ்ட் 11ல் ஆங்கிலேயர்கள் வெளியேறிய போது, நாங்கள் எங்கள் சுதந்திரத்தை அறிவித்துவிட்டோம்.’ இந்திய ஊடகங்கள் மற்றும் யூடியூபர்கள் இனி பலுசிஸ்தானை பாகிஸ்தானின் மாகாணமாகக் குறிப்பிட வேண்டாம். நாங்கள் பாகிஸ்தானியர்கள் அல்ல, பலுசிஸ்தானியர்கள். பலுசிஸ்தான் குடியரசாக உலகம் எங்களை அங்கீகரிக்க வேண்டும். இந்தியா, டெல்லியில் பலுசிஸ்தானின் தூதரகத்தை அமைக்க அனுமதி வழங்க வேண்டும். ஐநா, எங்களை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். இதற்குப் பிறகு, பலுசிஸ்தான் குடியரசு பற்றிய செய்திகள் சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்படுகிறது.
