வைகாசி விசாகத்தையொட்டி அனைத்து முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுவருகின்றன. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில், இன்று வைகாசி விசாக திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நள்ளிரவு 1 மணியளவில் நடை திறக்கப்பட்டது. தென்காசி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தனர். பக்தர்கள் அலகு,வேல் குத்தியும், காவடி சுமந்தும் நேர்த்தி கடன்களை செலுத்தினர். மேலும், அவர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். வைகாசி விசாக திருவிழாவை ஒட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்துள்ளனர். இதனால், திருசெந்தூரில் திருவிழா களைகட்டியுள்ளது.வைகாசி விசாகம் காரணமாக ஒவ்வொரு முருகன் கோயில்களிலும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காலை முதலே காத்திருந்து சாமி தரிசனம் செய்தும் வேண்டுதல்களை நிறைவேற்றியும் வருகின்றனர்.

