மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், பல முகமைகள் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளன.
அவற்றின் கணிப்புகள், தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சிக்கு வரும் என்று கூறுகின்றன.
தேசிய ஜனநாயகக் கூட்டணி 350 இடங்களுக்கு மேல் வெற்றி பெறக்கூடும் என்றும், எதிர்க்கட்சியான இந்திய கூட்டணி 125 முதல் 150 இடங்கள் வரை பெறலாம் என்றும் பல கணிப்புகள் தெரிவிக்கின்றன.
மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. ஆட்சியைப் பிடிக்க 272 பெரும்பான்மை போதுமானது. இந்தப் பெரும்பான்மையை பாஜக கூட்டணி பெறும் என்றே கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
இருப்பினும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக – காங்கிரஸின் இந்தியா கூட்டணி பெரும்பான்மை இடங்களைப் பிடிக்கும் என்று கணிக்கப்படுகிறது.
தமிழ்நாடு கருத்துக்கணிப்பு
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு 33 முதல் 37 தொகுதிகள் வரையும், இரண்டு முதல் நான்கு தொகுதி வரை பாஜகவுக்கும் கிடைக்கும் என்று இந்தியா டுடே கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. அதன் கணிப்புப்படி, அதிமுகவுக்கு 0 முதல் 2 தொகுதிகள் வரை கிடைக்கக்கூடும்.

