சச்சினின் உலக சாதனையை சமன் செய்த குர்பாஸ். சார்ஜாவில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடின. அத்தொடரின் முதல் 2 போட்டிகளில் 2 அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன. இதனால், சமனில் இருந்த அத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி நவம்பர் 11ஆம் தேதி நடைபெற்றது. சமீபத்திய காலங்களில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி தனது திறமைகளை வெளிப்படுத்தி வருகிறது. தென்னாபிரிக்காவை 2 – 1 என்ற போட்டி கணக்கில் தோற்கடித்துள்ளது. இதற்குப் பிறகு, ஆப்கானிஸ்தான் கடந்த 3 இருதரப்பு போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெற்றுள்ளது. தற்போது ஆடிய வங்கதேசத்திற்க்கு எதிரான வெற்றியில் முக்கிய பங்கு வகித்த குர்பாஸ், ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார். அவர் 22 வயதிலேயே ஒருநாள் கிரிக்கெட்டில் 8 சதங்கள் அடித்துள்ளார். இதன் மூலம், 22 வயதிலேயே அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையை பெற்று அவர் சச்சினின் சாதனையை சமன் செய்துள்ளார். இந்த சாதனையைப் பெற்ற வீரர்களில் சச்சின் டெண்டுல்கர், குவிண்டன் டீ காக் மற்றும் ரஹ்மனுல்லா குர்பாஸ் ஆகியோர் ஒவ்வொருவரும் 8 சதங்கள் அடித்துள்ளனர், மேலும் விராட் கோலி 7 சதங்கள் அடித்துள்ளார்.

