டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் பாதிக்கப்படுவதைத் தடுக்க, சிவப்பு பந்துக்குப் பதிலாக பிங்க் நிற பந்துகளைப் பயன்படுத்த ஐசிசி ஒப்புதல் அளித்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற ஐசிசியின் வருடாந்திர கூட்டத்தில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த புதிய விதிமுறைகள் அக்டோபர் 1, 2026 முதல் அமலுக்கு வரவுள்ளன. டெஸ்ட் போட்டிகளில் போதிய வெளிச்சம் இல்லாத சூழலில், அன்றைய நாள் ஆட்டம் அத்துடன் முடிவுக்கு வரும். இந்த சிக்கலைப் போக்க டெஸ்ட் போட்டிகளில் போதிய வெளிச்சம் இல்லாதபோது விளக்குகளைப் பயன்படுத்தி மீதமுள்ள ஓவர்களை விளையாட இந்த புதிய விதிமுறை வழிவகுக்கிறது.
ஒரு நாளில் 90 ஓவர்கள் வீசப்பட வேண்டும் என்ற நிலையில், 75 ஓவர்கள் சிவப்பு பந்தில் வீசப்பட்டு, வெளிச்சக் குறைவால் பாதிக்கப்படும்போது, பிங்க் நிற பந்தைப் பயன்படுத்தி விளக்குகளின் வெளிச்சத்தில் மீதமுள்ள ஓவர்களை வீசி முடிக்கலாம். இதனால் ஆட்ட நேரம் வீணாவது தடுக்கப்படும். அதே சமயம் இரு அணிகளின் முன்கூட்டிய ஒப்புதலும் இதற்கு அவசியம் ஆகும். அதாவது ஒரு டெஸ்ட் தொடர் தொடங்கும் முன்பே இரு அணிகளும் வெளிச்சமின்மையின் போது பிங்க் பந்தை பயன்படுத்த ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்.
மைதானத்திற்குள் நுழையும் பயிற்சியாளர்கள் டி20 கிரிக்கெட்டில் உள்ள வியூக இடைவேளை முறையைப் போல, இனி டெஸ்ட் போட்டிகளில் அதிகாரப்பூர்வ இடைவேளையின் (டிரிங்க்ஸ் பிரேக்) போது தலைமைப் பயிற்சியாளர்கள் அல்லது அவர்களால் பரிந்துரைக்கப்படும் நபர்கள் மைதானத்திற்குள் சென்று வீரர்களுடன் ஆலோசிக்க ஐசிசி அனுமதி அளித்துள்ளது. ஹாக்-ஐ தொழில்நுட்பம் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு முறை விதிகளுக்கு உட்பட்டதா என்பதை ஆராய நடுவர்கள் இனி ஹாக்-ஐ தொழில்நுட்பத்தின் தரவுகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதன் மூலம் முறையற்ற பந்துவீச்சைக் கண்டறிவது எளிதாகும். மேலும், டி20 போட்டிகளில் லெக்-சைடு ஒயிடு விதிமுறை நிரந்தரமாக்கப்பட்டுள்ளது. டி20 போட்டிகளில் இனி 15 நிமிட இடைவேளை கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், பேட்டர்கள் உடனடியாகக் களமிறங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஐசிசி கூட்டத்தில் மேலும் சில முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் கனடா கிரிக்கெட் வாரியம் சஸ்பெண்ட் உறுப்பினர் கடமைகளைச் சரியாகப் பின்பற்றாததால் கனடா கிரிக்கெட் வாரியத்தை ஐசிசி சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும், வங்கதேச கிரிக்கெட் வாரியத் தேர்தலைக் கண்காணிக்க மூத்த அதிகாரிகளை ஐசிசி நியமித்துள்ளது.

