நமிபியா பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்திய இந்திய பிரதமர் மோடி; உற்சாக வரவேற்பு அளித்த அந்நாட்டு மக்கள்

அரசியல் ஆப்ரிக்க நாடுகள் இந்தியா உலகம் கடந்த நிகழ்ச்சிகள் கலை / கலாச்சாரம் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

நரேந்திர மோடி
நமீபியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு நாடாளுமன்றத்தில், “உங்கள் விடுதலைப் போராட்டத்தின் போது இந்திய மக்கள் நமீபியாவுடன் பெருமையுடன் நின்றனர். வெறும் வார்த்தைகளில் மட்டுமல்ல, செயலிலும் உங்களுடன் நின்றதில் இந்தியா பெருமை கொள்கிறது” என பேசியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகளுக்கான அரசு முறைப் பயணத்தை கடந்த 2ஆம் தேதி தொடங்கினார். இந்தப் பயணம் இன்றுடன் (9ஆம் தேதி) 8 நாள் பயணமாக முடிந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி மேற்கொண்ட நீண்ட நாள் பயணமாக இது அமைந்துள்ளது.
அதன்படி, முதலில் கானா நாட்டிற்குச் சென்ற பிரதமர், அங்கிருந்து இரட்டைத் தீவு கரீபியன் நாடான டிரினிடேட் டுபாகோவிற்குச் சென்றார். அங்கிருந்து அர்ஜெண்டினா சென்ற பிரதமர், பின்னர் பிரேசில் நாட்டிற்குச் சென்று, அங்கு BRICS மாநாட்டில் பங்கேற்றார். அங்கிருந்து, இறுதியாக பிரதமர் நரேந்திர மோடி நமீபியா நாட்டிற்கு சென்றார்.
நமீபியாவுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு, விந்தோக் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டு அதிபர் நெடும்போ நந்தி தைத்வா விமான நிலையத்திற்கு வந்து பிரதமர் மோடியை வரவேற்றார். தொடர்ந்து அந்நாட்டு பாரம்பரிய இசைக் கருவியை வாசித்து, நடனமாடி பிரதமருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர்களுடன் சேர்ந்த பிரதமரும் இசைக் கருவியை வாசித்தார்.
இதனைத் தொடர்ந்து நமீபியா நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர், “ஜனநாயகத்தின் கோயிலான இந்த உன்னதமான சபையில் உரையாற்றுவது ஒரு பெரிய பாக்கியம். எனக்கு இந்த கௌரவத்தை வழங்கியதற்கு நன்றி. ஜனநாயகத் தாயின் பிரதிநிதியாக நான் உங்கள் முன் நிற்கிறேன். மேலும் இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களின் அன்பான வாழ்த்துக்களை என்னுடன் கொண்டு வந்திருக்கிறேன்.
நமீபியா அதன் முதல் பெண் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் சில மாதங்களுக்கு முன்பு, நீங்கள் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தைக் கொண்டாடினீர்கள். இந்தியாவில், நாங்கள் பெண் ஜனாதிபதியை கொண்டுள்ளதால், உங்கள் பெருமையையும் மகிழ்ச்சியையும் நாங்கள் புரிந்துகொள்கிறோம், பகிர்ந்து கொள்கிறோம்.
ஒரு ஏழை பழங்குடி குடும்பத்தின் மகள் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் ஜனாதிபதியாக இருப்பது இந்திய அரசியலமைப்பின் சக்தி. ஏழைக் குடும்பத்தில் பிறந்த என்னைப்போன்ற ஒருவருக்கு மூன்று முறை பிரதமராகும் வாய்ப்பை வழங்கியது அரசியலமைப்பின் சக்தி. எதுவும் இல்லாதவர்களுக்கு அரசியலமைப்பின் உத்தரவாதம் உள்ளது.
உங்கள் விடுதலைப் போராட்டத்தின் போது இந்திய மக்கள் நமீபியாவுடன் பெருமையுடன் நின்றனர். தமது சொந்த சுதந்திரத்திற்கு முன்பே, இந்தியா தென்மேற்கு ஆப்பிரிக்காவின் பிரச்சினையை ஐக்கிய நாடுகள் சபையில் எழுப்பியது. நமீபியாவில் ஐ.நா. அமைதி காக்கும் படையை வழிநடத்தியவர் இந்திய லெப்டினன்ட் ஜெனரல் திவான் பிரேம் சந்த் ஆவார். வெறும் வார்த்தைகளில் மட்டுமல்ல, செயலிலும் உங்களுடன் நின்றதில் இந்தியா பெருமை கொள்கிறது” என பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *