சர்வதேச சந்தையில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று காலை வர்த்தக தொடக்கத்திலேயே கடும் சரிவை சந்தித்தன. சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருந்து சுமார் ரூ.6,000 கோடி மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறினர். இதன் தாக்கமாக கடந்த வர்த்தக தினத்திலேயே சந்தை சரிவு காணப்பட்டது. மேலும் ஆசிய சந்தைகளான ஜப்பானின் நிக்கி மற்றும் தென் கொரியாவின் கோஸ்பி குறியீடுகள் இன்று காலை 6% முதல் 7% வரை சரிந்ததால் அதன் தாக்கம் இந்திய சந்தையிலும் பிரதிபலித்தது. இன்று காலை வர்த்தகம் தொடங்கியவுடன் சென்செக்ஸ் 2,047 புள்ளிகள் சரிந்து 76,872 என்ற நிலையில் வந்தது. அதேபோல் நிஃப்டி 600 புள்ளிகள் சரிந்து 23,850 என்ற நிலைக்கு தள்ளப்பட்டது.இதற்கிடையில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையே அதிகரித்துள்ள போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் அதிகரித்துள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 115 டாலர், டபிள்யூ.டி.ஐ எண்ணெய் 118 டாலர் வரை உயர்ந்துள்ளது. இந்தியா தனது தேவையில் 80 சதவீதத்திற்கும் அதிகமான கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதால் இந்த விலை உயர்வு நாட்டின் பொருளாதாரத்திற்கு அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக 92.25 ரூபாய் வரை சரிந்துள்ளது. இதன் தாக்கமாக எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி போன்ற வங்கி பங்குகள், மேலும் ஆட்டோ மற்றும் ஐடி துறையினைச் சேர்ந்த பங்குகளும் கடும் விற்பனை அழுத்தத்தை சந்தித்துள்ளன.

