மல்யுத்த வீரர் பஜ்ரங் புன்யா நான்கு ஆண்டுகளுக்கு விளையாட தடை; தேசிய போதை தடுப்பு ஏஜன்சி (நடா), இத்தடையை விதித்து உத்தரவு

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் நீதி மன்றம் மற்றவை முதன்மை செய்தி விளையாட்டு

ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ள இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, போதை குற்றச்சாட்டில் சிக்கியதை அடுத்து 4 ஆண்டுகளுக்கு போட்டிகளில் விளையாட தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ல், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்கில், 65 கிலோ பிரிவு மல்யுத்த போட்டியில் பங்கேற்று இந்தியாவுக்கு வெண்கலப்பதக்கம் பெற்றுத்தந்தவர் பஜ்ரங் புனியா. ஹரியானாவை சேர்ந்த இவர், காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக உள்ளார். பத்ம விருது பெற்றவர். இந்நிலையில், கடந்த மார்ச் 10ம் தேதி, தேசிய மல்யுத்த அணி தேர்வு சோதனைகளின்போது, போதைப் பொருள் சோதனைக்கான ரத்த மாதிரியை சமர்ப்பிக்க தவறியதாக பஜ்ரங் புனியா மீது புகார் எழுந்தது. இதையடுத்து, தேசிய போதை தடுப்பு ஏஜன்சி (நடா), மல்யுத்த போட்டிகளில் பஜ்ரங் புனியா பங்கேற்க தற்காலிக தடை விதித்து, கடந்த ஏப்.23ல் உத்தரவிட்டது. இதை எதிர்த்து புனியா மனு தாக்கல் செய்ததை அடுத்து, தடை உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டது. இருப்பினும், புனியா மீதான குற்றச்சாட்டை, கடந்த ஜூன் 23ம் தேதி நடா முறைப்படி அறிவித்தது. இதைத் தொடர்ந்து நடந்த விசாரணைகளின் அடிப்படையில், 4 ஆண்டுகள் மல்யுத்த போட்டிகளில் விளையாடவும், பயிற்சிகள் அளிக்கவும் புனியாவுக்கு தடை விதித்து நடா புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு, 23.4.2034 முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை ஏற்று, சர்வதேச நிர்வாக அமைப்பான, யுடபிள்யுடபிள்யு, புனியாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவை உறுதி செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *