தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்யின் 69-வது திரைப்படத்தை பிரபல இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கு ‘ஜன நாயகன்’ என்ற பெயர் சூட்டப்பட்டது. இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். குடியரசு தினத்தை முன்னிட்டு, இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாவது லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டு வைரலாகின. இந்த திரைப்படம் அரசியல் சார்ந்த குற்ற பின்னணி கொண்ட கதைக்களத்தில் உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் ரூ.400 கோடி செலவில் தயாரிக்கப்படும் இப்படம், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் படப்பிடிப்பு பணிகள் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை செவன் ஸ்க்ரின் ஸ்டூடியோ நிறுவனம் ரூ.100 கோடிக்கு பெற்றுள்ளது. விஜய்யின் கடைசி படம் என்பதால், படத்தின் ஓ.டி.டி உரிமையைப் பெறுவதற்கான போட்டி மிகவும் கடுமையாக இருந்தது. இந்த நிலையில், பிரபலமான நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஜன நாயகன் படத்தின் உரிமையை மிகப்பெரிய தொகைக்கு பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
