மணிக்கு 450 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் உலகின் அதிவேக ரயிலை சீனா தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த ரயில் வேகம், எரிசக்தி பயன்பாடு, உள் இரைச்சல் குறைப்பு மற்றும் பிரேக் செயல்பாடு போன்ற பல்வேறு அம்சங்களில் உலகளாவிய தரநிலைகளை உருவாக்கியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, புல்லட் ரயில் தொழில்நுட்பத்தில் ஜப்பான் முன்னணி நாடாக இருந்தது, ஆனால் தற்போது சீனாவின் புதிய புல்லட் ரயில்கள் உலகின் அனைத்து நாடுகளின் கவனத்தை ஈர்க்கின்றன. உலகின் அதிவேக புல்லட் ரயிலாக மாறவுள்ள CR450 புல்லட் ரயில், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயண நேரம் குறைவாக இருக்கும் என சீனா எதிர்பார்க்கிறது.சீன ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில், “சோதனை ஓட்டத்தின் போது மணிக்கு 450 கிமீ வேகத்தில் பயணித்தது. சிஆர் 450 புதிய மைல்கல்லை அடைந்துள்ளது. வேகம், எரிசக்தி பயன்பாடு, உள் இரைச்சல் குறைப்பு மற்றும் பிரேக் செயல்பாடு போன்றவற்றில் உலகளாவிய புதிய தரநிலைகளை இந்த ரயில் நிறுவியுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது. சீனா, தாய்லாந்து, இந்தோனேசியா, செர்பியா போன்ற நாடுகளுக்கு அதிவேக ரயில்களை ஏற்றுமதி செய்துள்ளது. இதன் மூலம், சீனா மேற்கொண்டு வரும் முயற்சிகளை கவனித்த பிற நாடுகள், புல்லட் ரயில்களை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளன.

