காஷ்மீரில் பஹல்காமில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். பிரதமர் மோடி சவுதி அரேபியாவில் இருந்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் ஆலோசனை நடத்தினார்.
காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. மேலும் காயமடைந்தவர்களில் 5 பேரில் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனிடையே சவுதி அரேபியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தொலைபேசியில் பேசி உள்ளார்.
ஜம்மு- காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் மலைக்கு டிரக்கிங் சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் உயிரிழந்ததுள்ளனர். மேலும் 13 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 5 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். அந்த இடத்திற்கு விரைந்துள்ள பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டையை துவக்கி உள்ளனர்.
இந்த நிலையில்,சவுதி அரேபிய சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தி உள்ளார். காஷ்மீர் தாக்குதல் குறித்தும் தற்போதைய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்துள்ளார்.
இந்த தாக்குதல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகையில், “பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஒருபோதும் தப்பிக்க முடியாது. அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அவரிடம் விளக்கமளித்துள்ளேன்.காஷ்மீரில் பாதுகாப்பு குறித்து தெரிந்துகொள்ள விரைவில் ஸ்ரீநகர் செல்லவிருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
