இந்தியா நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை உருவாக்கிவருகிறது. மேலும், விண்வெளியில் தனக்கே உரித்தான ஆய்வு நிலையத்தை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. இதற்கான விண்கலங்கள் 2028-ம் ஆண்டு முதல் விண்ணில் தொடர்ந்து செலுத்தப்பட்டு ஒருங்கிணைக்கப்படவுள்ளன. இத்தகைய விண்வெளி திட்டங்களுக்கு, ஒருநாடு ஸ்பேடெக்ஸ் (SPADEX – ஸ்பேஸ் டாகிங் எக்ஸ்பிரிமென்ட்) என்ற நுட்பத்தின் கீழ் செயற்கைக்கோள்களை ஒருங்கிணைத்தல் மற்றும் விடுவித்தல் போன்ற பரிசோதனைகளில் வெற்றி பெறுவது அவசியமாகும்.இஸ்ரோ, கடந்த டிசம்பர் 30-ந் தேதி 2 செயற்கைக்கோள்களை விண்ணில் நிலை நிறுத்தியது. அதன் பிறகு, அவற்றின் சுற்றுவட்டப்பாதை இடைவெளிகளை மெதுவாக குறைத்து, ஜனவரி 16-ந் தேதி 2 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டன. இதன் மூலம் ‘விண்வெளி டாக்கிங்’ தொழில்நுட்பத்தை கொண்ட 4-வது நாடாக இந்தியா பெருமை பெற்றது. பின்னர், மார்ச் 13-ந் தேதி இந்த இரட்டை செயற்கைக்கோள்கள் மீண்டும் பிரிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இந்த சூழலில், இஸ்ரோ நிறுவனம் நேற்று 2-வது முறையாக ஸ்பேஸ் டாக்கிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 2 செயற்கைக்கோள்களை இணைக்கும் சோதனையை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. “இஸ்ரோ 2-வது ஸ்பேடாக்கிங் முறையில் செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக இணைத்ததை அறிவிப்பதில் மகிழ்ச்சி ” என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
