1. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் மட்டுமே ராக்கெட் ஏவுதளங்களை கொண்டுள்ளது. இங்கு இந்தியாவின் செயற்கைக்கோள்கள் மற்றும் பல உலக நாடுகளின் செயற்கைக்கோள்கள் ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் ஏவப்படுகின்றன. பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி போன்ற ராக்கெட்டுகளின் மூலம் பல்வேறு செயற்கைக்கோள்கள் இங்கு இருந்து விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன. இப்போது புதிய ஏவுதளத்தை உருவாக்கும் பணியில் இஸ்ரோ செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க, சில ஆண்டுகளுக்கு முன் 2,233 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கான கட்டுமான பணிகள் பூமி பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் விஞ்ஞானி ராஜராஜன் உட்பட பல இஸ்ரோ விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர். பூமி பூஜை நடைபெற்ற இடத்தில், இஸ்ரோ சார்பில் உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமான வசதிகள் உருவாக்கப்பட உள்ளன. ஸ்ரீஹரிக்கோட்டாவில் ராக்கெட் ஏவுதளத்தை அமைக்கும் முன்பே, ஏவுதளத்திற்கான பரிந்துரைக்கப்பட்ட இடங்களில் குலசேகரன்பட்டினமும் ஒன்று. அறிவியல் அடிப்படையில், துருவ வட்டப் பாதையில் செயற்கைக் கோள்கள் அதிக அளவில் செலுத்தப்படுகின்றன. குலசேகரன்பட்டினம் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ளது, இதற்கு தெற்கே எந்த நிலப்பரப்பும் காணப்படவில்லை. பூகோள ரீதியாக, ஏவுகணைகளை அனுப்பும் போது தெற்கு திசையில் கடல் மட்டுமே இருக்கும் இடம் குலசேகரன்பட்டினம் ஆகும். கடந்த ஆண்டு, பிப்ரவரி 28-ம் தேதி தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

