ஆப்கானிஸ்தானில் பெண்கள் அழகு நிலையங்களுக்குத் தடை விதித்து தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.
தாலிபான் அமைப்பினர் ஆப்கானிஸ்தானை தன்வசம் படுத்தியது முதல் பெண்களுக்கு எதிராக பல்வேறு தடைகளை விதித்து வருகின்றனர். முதலில் பெண்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லக் கூடாது; பூங்கா, சினிமா மற்றும் பொழுதுபோக்கு மையங்களில் வேலை செய்ய கூடாது; பொது இடங்களுக்கு ஆண்கள் துணையின்றி செல்லக் கூடாது உள்ளிட்ட தடைகளை விதித்துள்ளனர்.
இந்நிலையில், அடுத்தகட்ட தாக்குதலாக தலைநகர் காபூல் மற்றும் பிற மாகாணங்களில் பெண்களுக்கான அழகு நிலையங்கள் செயல்படுவதற்கு தடை விதித்து தாலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது. பெண்கள் அழகு நிலையங்களின் உரிமத்தை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளதாக தாலிபான் அரசின் நல்ஒழுக்க அமைச்சக செய்தி தொடர்பாளர் முகமது சித்திக் தெரிவித்துள்ளார். இதனால் ஏராளமான பெண்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பெண்கள் அழகு நிலையங்களை மூட ஒரு மாதம் மட்டுமே காலக்கெடு என தாலிபான் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பெண்களின் உரிமைகள் மீதான தலிபான்களின் தொடர் தாக்குதல்களுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

