2024-ம் ஆண்டின் கடைசி நாளான இன்று(டிசம்பர் 31) இந்தியாவில் இன்னும் சில மணிநேரங்களில் முடிவடையவிருக்கும் நிலையில் புத்தாண்டை(2025) வரவேற்க உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும், நாட்டு மக்களும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். அந்த வகையில் உலகின் முதல் நாடாகப் பசிபிக் பெருங்கடலில் உள்ள கிரிபாட்டி மற்றும் டோங்கா சாமோவா ஆகிய தீவுகளில் 2025ம் ஆண்டிற்கான புத்தாண்டு பிறந்தது. இதையடுத்து இந்திய நேரப்படி மாலை 04.30 மணியளவில் நியூசிலாந்தில் 2025ம் ஆண்டிற்கான புத்தாண்டு பிறந்தது. 2025ஆம் ஆண்டை வரவேற்கும் விதமாக வாண வேடிக்கைகளுடன் கோலாகலமாக்கப் புத்தாண்டைக் கொண்டாடினர்.அதனைத் தொடர்ந்து இந்திய நேரப்படி மாலை 06.30 மணியளவில் ஆஸ்திரேலியாவில் 2025ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு பிறந்தது. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மக்கள் கண்கவர் வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டை உற்சாகமாகக கொண்டாடினர். கேக் வெட்டி, ஆட்டம், பாட்டம் எனப் புத்தாண்டை மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர். இந்தியாவில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்கள், பாரம்பரிய கட்டிடங்கள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி இன்று மாலை முதல் போக்குவரத்து தடை செய்யப்படும் சாலைகள், மூடப்படும் மேம்பாலங்கள் ஆகியவற்றின் விவரங்களைச் சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர். அதோடு மெரினா, எலியட்ஸ் ஆகிய கடற்கரைக்கு வருவோர் தங்களது வாகனங்களை நிறுத்த கூடிய இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

