தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பரவலாக மழை பெய்ய தொடங்கியுள்ளது. மேலும் வங்ககடலில் உருவான காற்றழுத்த பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றதால் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் இன்று செங்கல்பட்டு உள்பட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் இன்றும் கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 16ம் தேதி தொடங்கிய பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகியுள்ளதால், மழை தொடர்ந்து தமிழகம் முழுவதும் வெளுத்து வாங்கி வருகிறது. காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் புதுச்சேரி முதல் ராமநாதபுரம் வரை கடலோர பகுதிகளிலும் மற்றும் காவிரி படுகை மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் காலை முதல் கனமழை பெய்து வருகிறது. அன்று அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் 17 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை மழை விட்டு, விட்டு பெய்து வருகிறது. இதனால் நகரில் எங்கும் தண்ணீர் தேங்கவில்லை. மழை பாதிப்புகள் எங்கும் ஏற்படவில்லை. அதேநேரத்தில் மழையை சமாளிக்க சென்னை மாநகராட்சி, சென்னை போலீஸ், தீயணைப்புத்துறை ஆகியோர் இணைந்து செயலாற்றுவதற்கு தயார் நிலையில் உள்ளனர்.
சென்னையில் நேற்று காலை முதல் விடாமல் மழை கொட்டி தீர்த்தது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இன்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன-மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. வங்கக்கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசம் என்பதால் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை உள்பட 17 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. செங்கல்பட்டு உள்பட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. சென்னையில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால், சென்னை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சை, காரைக்கால் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர், புதுவை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

